எடப்பாடி அருகேஇளம்பெண் தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை


எடப்பாடி அருகேஇளம்பெண் தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை
x
சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன பணியாளர்

எடப்பாடி நகராட்சி ஜலகண்டாபுரம் ரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களுடைய மூத்த மகள் தனலட்சுமி (வயது 23). இவர் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பணியாளராக பணியாற்றி வந்தார்.

தனலட்சுமியும், அவருடன் வேலை செய்து வந்த எடப்பாடியை சேர்ந்த மணிமேகலை என்பவரும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தனலட்சுமி, மணிமேகலையின் வீட்டிலேயே தான் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு தனலட்சுமி துணிப்பையுடன் எடப்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தவர் உடனே வெளியே புறப்பட்டு உள்ளார். வீட்டுக்கு வந்த உடன் எங்கே புறப்படுகிறாய் என்று தாயார் கேட்டதற்கு உடல்நலம் சரியில்லை என கூறிவிட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை.

செல்போன் சுவிட்ச்-ஆப்

இதையடுத்து தனலட்சுமியின் தங்கை கோமதி, தனது அக்காளின் நெருங்கிய தோழியான மணிமேகலையின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இந்தநிலையில் மணிமேகலை மற்றும் தனலட்சுமி செல்போனுக்கு கோமதி தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரின் செல்போன்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தன.

இதையடுத்து மணிமேகலையின் கணவர் முருகனுக்கு தனலட்சுமியின் தங்கை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, குடும்ப தகராறு காரணமாக மணிமேகலை இளம்பிள்ளையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமியின் தங்கைக்கு மணிமேகலையின் கணவர் முருகன் செல்போனில் தொடர்பு கொண்டு உனது அக்காள் தனலட்சுமி விஷம் குடித்து இறந்து விட்டார் என்றும், உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதையடுத்து தனது மகள் தற்கொலை சம்பவம் குறித்து முனியம்மாள் எடப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story