பள்ளிபாளையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குட்டைமுக்கு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி நிர்மலா தேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் மகாலட்சுமி (17) அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மகாலட்சுமி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது அறைக்குள் சென்று பூட்டிவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
இதையடுத்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.