பாலக்கோட்டில், திருமணமான ஒரு ஆண்டில்புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


பாலக்கோட்டில், திருமணமான ஒரு ஆண்டில்புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2023 7:00 PM GMT (Updated: 28 April 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோட்டில் திருமணமான ஒரு ஆண்டில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மெக்கானிக்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவருக்கும் கடமடையை சேர்ந்த சவுமியா (21) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சவுமியா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனால் கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு மது போதையில் வந்த பிரதீப் மனைவியிடம் இனிமேல் நீ வேலைக்கு செல்லக்கூடாது என கூறினாராம். ஆனால் சவுமியா கணவரின் பேச்சை கேட்காமல் இரவு ஷிப்ட் வேலைக்கு சென்று விட்டாராம்.

தற்கொலை

இந்த நிலையில் தனது பேச்சை கேட்காமல் மனைவி வேலைக்கு சென்றதால் விரக்தியடைந்த பிரதீப் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நேற்று காலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சவுமியா நீண்ட நேரம் அழைத்தும் கணவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது பிரதீப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story