டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2023 8:54 PM GMT (Updated: 7 Jun 2023 6:30 AM GMT)

டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கல்லூரி மாணவர்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மூத்த மகன் மதன்குமார். இளையமகன் மவுலி சங்கர் (வயது 18).

மதன்குமார் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மவுலி சங்கர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மவுலிசங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

தூக்கில் தொங்கினார்

வேலை முடிந்ததும் மாலையில் மதன்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் மாடிப்படி வழியாக சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு மவுலிசங்கர் தொங்கினார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மதன்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மவுலிசங்கரை மீட்டார். பின்னர் உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மவுலிசங்கர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

காரணம் என்ன?

இதுபற்றி தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மவுலிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மவுலிசங்கர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story