கோடை விழா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்


கோடை விழா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
x

கடலூா் சில்வா் பீச்சில் கோடை விழா விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான கோடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை 3 நாட்கள் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கிறது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சில்வர் பீச்சில் மேடை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே விளையாட்டு துறையின் சார்பில் கோடை விழா விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் போட்டிகள் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

கடற்கரை கபடி

பின்னர் கடற்கரை கபடி போட்டி நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா நடத்தினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை நடக்கும் கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மேலும் கோடை விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புத்தக கண்காட்சி அரங்குகளுடன் கூடிய அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதுதவிர 3 நாட்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, பள்ளி, கல்லூரி மாணவர்களின் பரதம், நடனம், நாடகம், சிலம்பாட்டம், தப்பாட்டம் மற்றும் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம், முல்லை தயாளனின் நகைச்சுவை நிகழ்ச்சி, விஜய் டி.வி.பிரபலங்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.


Next Story