கோடை சீசன்: நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மே மாதம் இறுதிவரை போக்குவரத்து மாற்றம்..!


கோடை சீசன்: நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மே மாதம் இறுதிவரை போக்குவரத்து மாற்றம்..!
x

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நீலகிரி,

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடவும், கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

கடந்தாண்டு கோடை சீசனில் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்தநிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் ஊட்டிக்கு வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கோடை சீசனையொட்டி (நள்ளிரவு 12 மணி) முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-பரலியார் சாலை, கோத்தகிரி சலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் உதகை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, உதகை - கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story