கோடை விடுமுறை எதிரொலி: களைகட்டிய ஒகேனக்கல் - அணிவகுத்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள்


கோடை விடுமுறை எதிரொலி: களைகட்டிய ஒகேனக்கல் - அணிவகுத்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள்
x

சுற்றுலா பயணிகளின் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

தர்மபுரி,

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன. இதனால் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு திரண்டு வந்தனர்.

குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகளில் பலர், முதலை பண்ணை காவிரி ஆறு மற்றும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பாக குளித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

மேலும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




Next Story