ஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!


ஞாயிறு விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
x

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி, இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகாரமாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களி லும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்த நிலையில் சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story