பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று சூரசம்ஹாரம்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:00 PM GMT (Updated: 14 Sep 2023 7:01 PM GMT)

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

சூரசம்ஹாரம்

திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி முதல் நாள் திருவிழாவில் உற்சவர் கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் திருவிழாவான இரவு சிம்ம வாகனத்திலும், 3-ம் திருநாள் அன்று பூத வாகனத்திலும், 4-வது நாள் கமல வாகனத்திலும், 5-வது நாளான நேற்று இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 6-ம் நாளான இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 7-ம் நாளன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ம் நாளான வரும் 18-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் திருநாளான வரும் 19-ந்தேதி அன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

விழாவையொட்டி இரவு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் முழுவதும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story