திருத்தணியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவிடும் பணி


திருத்தணியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவிடும் பணி
x

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அளவிடும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை திட்டம் மலைக்கோவிலில் இருந்து அமிர்தாபுரம் வரை செயல்படுத்த இந்து அறநிலை துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து, முருகன் கோவில் செயல் அலுவலர் விஜயா தலைமையில், வருவாய்த்துறையினர், வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் ஆகியோர் மாற்றுப்பாதை அமைக்கப்படவுள்ள இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மடம் கிராமத்தில் 15 வீடுகள் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 15 வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் வீடுகளை காலி செய்யாமல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முருகன் கோவில் அதிகாரிகள் மடம் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறிவிப்பு பலகை வைக்க சென்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் இரு தரப்பினரிடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் சர்வேயர் வைத்து அளவீடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோவில் கண்காணிப்பாளர்கள் சித்ராதேவி, ஐயம்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் கமல், சர்வேயர் கோவிந்தராஜ் ஆகியோர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் மடம் கிராமத்தில் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர். நில அளவீடு செய்யும் பகுதியில் குளம் மற்றும் மரம் செடிகள் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் துல்லியமான அளவீடு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் டி.ஜி.பி.எஸ். எனும் நவீன எந்திரத்தை பயன்படுத்தி மற்றொரு நாளில் நில அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இதுகுறித்து கோவில் துணை ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாக வருவாய் ஆய்வாளர் கமல் தெரிவித்தார்.


Next Story