பெரியபாளையத்தில் கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி


பெரியபாளையத்தில் கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி
x

பெரியபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

ஒரு லட்சத்து 1-வது நில அளவீடு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 42 ஆயிரத்து 429.32 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் வருவாய்த் துறை ஆவணங்களோடு ஒத்துப்போகும் நிலங்களின் பரப்பு 3 லட்சத்து 43 ஆயிரம் ஆகும். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஒரு லட்சம் ஏக்கர் கோலில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு நிறைவடைந்த நிலையில் ஒரு லட்சத்து 1-வது ஏக்கர் நில அளவீடு செய்யும் பணியினை திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். இதில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ராதேவி, பெரியபாளையம் கோவில் அறங்காவலர் லோகமித்ரா, கோவிலின் செயல் அலுவலர்கள் பிரகாஷ், செந்தில்குமார், தி.மு.க நிர்வாகிகள் பி.ஜே.மூர்த்தி, சத்தியவேலு, வக்கீல் சீனிவாசன், கே.வி.லோகேஷ், வி.பி.ரவிக்குமார், அப்புன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கோவில் பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

இதைபோல் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் உள்ள திருவெண்ணீஸ்வரர் கோவிலில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கோவில் பின்புறம் உள்ள திருக்குளத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சோழர் காலத்தில் பரந்தக சோழனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் சிதிலமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பணி செய்வதற்காக ரூ.57 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருக்குளம் செப்பனிடவும் அதற்கான நடவடிக்கையாக ஆணையாளர் பொது நிதியிலிருந்து செலவிட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான புணரமைப்புபணி விரைவில் தொடங்கும் என கூறினார்.


Next Story