நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை அடித்து கொன்ற கார் டிரைவர் கைது - தாயை இழந்து 2 மகன்கள் தவிப்பு


நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை அடித்து கொன்ற கார் டிரைவர் கைது - தாயை இழந்து 2 மகன்கள் தவிப்பு
x

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், காதல் மனைவியை அடித்து கொலை செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். தாயை இழந்த 2 மகன்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் பழனி (வயது 31). இவரது மனைவி பாரதி (25). கார் டிரைவரான பழனியும், பாரதியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதிலும், 6 வயதிலும் 2 மகன்கள் இருக்கின்றனர்.

பழனிக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த 2 மாதமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ள பழனி, மனைவி பாரதிக்கு செலவுக்கும் சரியாக பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், பாரதி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சூளைமேட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், வீட்டில் சும்மாவே இருந்த பழனிக்கு மனைவி பாரதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் பாரதியிடம், இதுதொடர்பாகவும் மது போதையில் சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், பாரதியை தேடி, அவர் வேலை பார்த்த டீக்கடைக்கு மது போதையில் பழனி சென்றுள்ளார். அந்த நேரத்தில் பாரதி, உடன் வேலை பார்க்கும் கல்பனா என்பவருடன், டீக்கடையின் 3-வது மாடியில் இருக்கும் கழிவறைக்கு சென்றிருக்கிறார்.

மாடிப்படி ஏறி, அங்கேயே சென்ற பழனி, பாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை தாக்கத் தொடங்கியுள்ளார். பாரதியை கீழே பிடித்து பழனி தள்ளியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்தம் சொட்ட.. சொட்ட.. கீழே விழுந்த பாரதி வலியால் துடித்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பாரதி, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். தாயை இழந்த 2 குழந்தைகளும் தவித்து வருகின்றனர். பாரதி இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சூளைமேடு போலீசார், பழனியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


Next Story