குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


குற்றாலம் அருவிகளில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாலை தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் திடீெரன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் அதிக கூட்டம் வரும் என்பதால் அன்று முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

குளிக்க அனுமதி

நேற்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஒருசிலர் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் ஒரு தனியார் கட்டிடத்தின் வாசலில் சிங்க முகம் போன்ற சிலையின் வாயில் இருந்து வெளியேறிய ஓடை தண்ணீரில் குளித்தனர்.

இந்த நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து காலை 8-20 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

இன்றும் (சனி), நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story