மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை


மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை
x

வேடசந்தூர் அருகே மாமியாரிடம் செல்போன் பறித்ததை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

விவசாயி

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ். அவருடைய மனைவி மேரி (வயது 50). கூலித்தொழிலாளி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் செல்வராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு கிருஷ்டி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதனால் மேரி தனியாக வசித்து வருகிறார்.

கிருஷ்டியின் கணவர் எட்வின் ஜோசுவா (28). விவசாயி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரில் எட்வின் ஜோசுவா-கிருஷ்டி தம்பதி தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

செல்போன் பறிப்பு

நேற்று முன்தினம் இரவு தனது மாமியார் மேரியின் செல்போனுக்கு எட்வின் ஜோசுவா தொடர்பு கொண்டார். ஆனால் எதிர்முனையில் மேரி பேசவில்லை. அதற்கு பதிலாக ஆண் ஒருவர் பேசினார். இதனால் எட்வின் ஜோசுவா அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அந்த நபரிடம் எட்வின் ஜோசுவா கேட்டார்.

அப்போது அந்த நபர், புறம்போக்கு நிலத்தில் மேரி வீடு கட்டி வசித்து வருவதாகவும், இதற்காக தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று அவரை மிரட்டினோம். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. எனவே மேரியிடம் இருந்து செல்போனை பறித்து வந்து விட்டதாக தெரிவித்தார். இந்த தகவலை கேட்ட எட்வின் ஜோசுவா அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் எட்வின் ேஜாசுவாவுக்கும், அந்த நபருக்கும் செல்போனிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேரியையும், எட்வின் ஜோசுவாவையும் அந்த நபர் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

சரமாரி தாக்குதல்

எட்வின் ஜோசுவாவின் முகவரியை கேட்ட அந்த நபர், உண்டார்பட்டி அருகே உள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே வருமாறு அழைத்தார். அதன்படி எட்வின் ஜோசுவா தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார்.

அப்போது பாலத்தில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த 3 பேர், எட்வின் ஜோசுவாவை சரமாரியாக தாக்கினர். அடித்து உதைத்ததில் நிலைகுலைந்துபோன அவர் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவர் மீது மோட்டார் சைக்கிளை தூக்கி போட்டனர். எட்வின் ஜோசுவா இறந்து விட்டதாக கருதி, அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பரிதாப சாவு

இந்தநிலையில் அந்த வழியாக, பால் வியாபாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த எட்வின் ஜோசுவாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர் அருகே சென்று பார்த்தார்.

பின்னர் எட்வின் ஜோசுவா மூலம், அவரது மனைவி கிருஷ்டியின் செல்போன் எண்ணை வாங்கி பேசி நடந்த விவரத்தை கூறினார். இதனால் பதறி அடித்துக்கொண்டு அவரது குடும்பத்தினர் அங்கு வந்தனர். பின்னர் குற்றுயிரும், குைலயுயிருமாய் கிடந்த எட்வின் ேஜாசுவாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கிருஷ்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எட்வின் ஜோசுவாவை அடித்து கொலை செய்தது திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story