நேரடி வரி வசூலில் அகில இந்திய அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-ம் இடம்


நேரடி வரி வசூலில் அகில இந்திய அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-ம் இடம்
x

அகில இந்திய அளவில் நேரடி வரி வசூலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-ம் இடம் பிடித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் 2022-23 நிதி ஆண்டின் மொத்த வரி வசூல் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 414 கோடி. இதில் நிகர வரி வசூல் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 364 கோடி. தேசிய அளவில் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-ம் இடத்தில் உள்ளது. நிகர வரி வசூலான ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 364 கோடியில், ரூ.60 ஆயிரத்து 464 கோடி டி.டி.எஸ். (வருமானவரி பிடித்தம்) மற்றும் டி.சி.எஸ். (வசூலிக்கப்படும் வரி) மூலமாக வசூலானது. இது நிகர வரி வசூலில் 56 சதவீத பங்கு ஆகும்.

டி.டி.எஸ். வசூலை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 50 சதவீத வசூல் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ். அதைத்தொடர்ந்து தொழில்முறை, தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் ஒப்பந்த கட்டணங்களுக்கான டி.டி.எஸ். ஆகும். 2023-24 நிதியாண்டுக்கு, இந்த மண்டலத்துக்கான வரி வசூல் இலக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலக்கில் டி.டி.எஸ்., டி.சி.எஸ்.-க்கான இலக்கு ரூ.59 ஆயிரத்து 851 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

'டி.டி.எஸ். நண்பன்'

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள வரி பிடித்தம் செய்பவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, டி.டி.எஸ். தலைமை கமிஷனரால் டி.டி.எஸ். பிடிப்பவர்களுக்கான பிரசுரங்கள் மற்றும் கையேடு 2023, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 'TRACES' இணையதளத்தில் வரிப்பிடித்தம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கும் விதமாக தமிழ் மொழியில் 16 காணொலிகள் யூடியூப் சேனலில் (https://youtube.com@incometaxtamilnaduand puduc9090) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித்துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக 'டி.டி.எஸ். நண்பன்' என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு மற்றும் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற டி.டி.எஸ். தொடர்பான கேள்விகளுக்கு பிரத்யேகமாக தகவல்களை வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'Chatbot' செயலியை சென்னை வருமான வரி முன்னாள் தலைமை கமிஷனர் (டி.டி.எஸ்.) ரத்தினசாமி முன்னிலையில் சென்னை வருமான வரி முதன்மை தலைமை கமிஷனர் சஞ்சய்குமார் வர்மா தொடங்கிவைத்தார். 'Chatbot' செயலியை பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி இணையதளத்தில் (www.tnincometax.gov.in) கிடைக்கப்பெறும். யூ.ஆர்.எல். இணைப்பு வாயிலாகவும் அணுகலாம்.

மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story