ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு தகவல்


ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு தகவல்
x

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பே 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சென்னை,

தமிழக பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை தமிழக சபாநாயகர் அப்பாவு கண்காட்சியை பார்வையிட்டார்.

இதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூகத்தில் பல மாற்றங்கள், சீர்திருத்தங்கள், வளர்ச்சிக்கு ஒரேயொரு புகைப்படமே காரணமாக இருந்துள்ளன. 100 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

நான் எப்போதும் பத்திரிகையாளர்களுடன் தான் இருப்பேன். புகைப்பட கலைஞர்கள் ஒரு புகைப்படத்தை எடுத்து மறுநாள் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்கிற பணியை செய்கிற அதே வேளையில் அதை பத்திரிகையில் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருப்போம்.

ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. அடுத்த நொடியே நேரலையாக ஒளிபரப்பாகிறது. இதெல்லாம் புகைப்படத்துறையின் பரிணாம வளர்ச்சி தான். உலகத்தில் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்கள் ஆனாலும் உடனடியாக பார்க்கக்கூடிய விஞ்ஞான வளர்ச்சி பாராட்டுக்குரியது.

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்பு தான் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story