உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கடன் சுமை 52% அதிகரிப்பு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு


உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கடன் சுமை 52% அதிகரிப்பு - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் சுமை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் செப்டம்பர் 2015 இல் ரூபாய் 81,312 கோடியாக இருந்தது, மார்ச் 2020 இல் ரூபாய் 1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடன் சுமை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததனால் கடன் சுமை குறைவதற்கு மாறாக அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 20 சதவிகிதம் கூடுதலாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் தேவை அதிகம் உள்ள இத்தகைய நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 20 சதவிகிதம் மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டுமென ஒன்றிய மின்துறை அமைச்சகம் திடீரென அறிவித்துள்ளது.

இந்த மின்சார பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசின் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். இது பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் தாக்குதலாகவே கருத வேண்டும். இத்தகைய கட்டண உயர்வை பொதுமக்களோ, தொழில்துறையினரோ எதிர்கொள்ள முடியாத வகையில் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, ஜனவரி 2017 இல் பா.ஜ.க. அரசின் நெருக்கடியால் உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தமிழகத்தை 21-வது மாநிலமாக இணைத்ததனால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய இணைப்பின் மூலம் ரூபாய் 11,000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சேமிப்பு ஏற்படும் என்று அன்றைய அ.தி.மு.க. மின்துறை அமைச்சர் கூறியதையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 92 சதவிகித கடன்கள் உதய் திட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியதையும் எவரும் மறந்திட இயலாது. அன்றைய மின்துறை அமைச்சர் கூறியதற்கு மாறாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் செப்டம்பர் 2015 இல் ரூபாய் 81,312 கோடியாக இருந்தது, மார்ச் 2020 இல் ரூபாய் 1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடன் சுமை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததனால் கடன் சுமை குறைவதற்கு மாறாக அதிகரித்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிற நிலையில் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story