கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்; இன்று சொந்த மாநிலமான பீகாருக்கு ரெயிலில் செல்கிறார்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தனது சொந்த மாநிலமான பீகாருக்கு செல்கிறார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 8.45 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவர் டெல்லியில் முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தனது சொந்த மாநிலமான பீகாருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் மீண்டும் ரெயில் மூலம் டெல்லி திரும்புகிறார். நாளை (புதன்கிழமை) இரவு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப இருக்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி மற்றும் பீகார் பயணம் தனிப்பட்ட காரணங்களுக்கானது என்பதால், இதில் அரசியல் பரபரப்புக்கு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.