போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி...!


போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில்  கட்டணமில்லா பயிற்சி...!
x
தினத்தந்தி 14 March 2023 3:54 PM GMT (Updated: 14 March 2023 4:17 PM GMT)

போட்டித் தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆர்.ஆர்.பி (TNPSC, SSC, IBPS, RRB) ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் , நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது .

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 01- 01-2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 15.03.2023 முதல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு. தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். 10.04.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story