முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது: ஜப்பான் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு


முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது: ஜப்பான் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு
x

தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது என்று ஜப்பானில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந்தேதியன்று சிங்கப்பூர் சென்றார்.

தொடர்ந்து, 24 மற்றும் 25-ந்தேதிகளில் சிங்கப்பூர் நாட்டின் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் மந்திரிகளையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதுடன், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்துக்கு சென்றடைந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதன் தொடர்ச்சியாக நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்பிலேட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்க பிரிவு தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வே.விஷ்ணு ஆகியோரும் கையெழுத்திட்டனர். அப்போது, டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிஹிரோ அவோகி உடன் இருந்தார்.

ஒத்துழைப்பு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024' ஜனவரி 10 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக எங்கள் மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நாங்கள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில், முதல் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு வந்துள்ளேன்.

இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது. தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.

லட்சிய இலக்கு

நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, யோரோசு, ஹிட்டாச்சி மற்றும் யூனிப்ரெஸ் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இது நீண்டுகொண்டே போகும் பட்டியல். ஜப்பான்-இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர். பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்- ஜெட்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை ஆகிய நிறுவன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனகாவா, ஹிரோஷி மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஜப்பானிய நாட்டின் மிகப்பெரும் வங்கிகளான, பேங்க் ஆப் டோக்கியோ உள்ளிட்ட 3 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தொழிற்கொள்கைகள்

டைசல் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ், ரெனோ-நிஸ்ஸான் விரிவாக்கத் திட்டம் மற்றும் மக்கினோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவுவதற்காக சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. அதனால்தான் எங்களுடன் இணைந்திடுமாறு, உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள விழைகின்றன. இந்தநிலையை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம்.

சிவப்பு கம்பளம்

இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத்தான் வளர முடியும். இந்தியாவுடன் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாக தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த மனித வாழ்வியல் நெறியை கொண்ட நாடு ஜப்பான். அந்த அடிப்படையோடு தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடும் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சந்திப்பு

அதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் நோபுஹிகோ யமாகுஜியை சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வணிக கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வே.விஷ்ணு, ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story