தீயில் கருகி டீக்கடை ஊழியர் பலி


தீயில் கருகி டீக்கடை ஊழியர் பலி
x

கன்னிவாடியில் டீக்கடையில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பிடித்து உடல் கருகி ஊழியர் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 45). இவரும், அதே ஊரை சேர்ந்த தண்டபாணி (53) என்பவரும் கன்னிவாடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் வழக்கம்போல் அவர்கள் டீக்கடையை திறந்தனர். பின்னர் அவர்கள் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தனர். முன்னதாக கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி இருந்தது. இதனை அவர்கள் 2 பேரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே அவர்கள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தவுடன் குபீர் என்று தீப்பிடித்தது. இதில் அவர்கள் 2 பேர் மீதும் தீ பரவி, உடலில் பற்றி எரிந்தது. அவர்கள் அபயகுரல் எழுப்பினர்.

அப்போது அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேர் மீதும் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மதுரைவீரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதுரைவீரன் நேற்று உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தண்டபாணிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மதுரைவீரனுக்கு வனிதா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story