மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டீக்கடை ஊழியர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டீக்கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2023 9:00 PM GMT (Updated: 14 Oct 2023 9:00 PM GMT)

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டீக்கடை ஊழியர் பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியை சேர்ந்தவர் ராஜூ (வயது 41). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் இவர், கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமதுரையில் உள்ள தனியார் பேக்கரி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராஜூ நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜூவின் மனைவி சங்கீதா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story