ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான சிறந்த பணி - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து


ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான சிறந்த பணி - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து
x
தினத்தந்தி 4 Sep 2023 9:36 AM GMT (Updated: 4 Sep 2023 10:04 AM GMT)

மாணவர்களின் உயர்வுக்கும், சமூக உயர்வுக்கும், நாட்டின் உயர்வுக்கும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மாணவர்களின் உயர்வுக்கும், சமூக உயர்வுக்கும், நாட்டின் உயர்வுக்கும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேனாள் இந்திய ஜனாதிபதி தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை, ஆசிரியர் நாளாக 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்.

நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தங்களுடைய தன்னலமற்ற பணியால், சேவையால் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி வருகின்றனர். கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும் கருவியாக இருக்கின்றது. எனவேதான் ஆசிரியர் சமூகத்திற்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பதில் மக்கள் பேரூவகை கொள்கின்றனர்.

மாறிவரும் உலக மயச் சூழலில், கல்வி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வரும் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான சிறந்த பணி ஆகும். பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story