பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

தங்கச்சங்கிலியை பறிக்கும் முயற்சியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

அடுக்குமாடி குடியிருப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் கல்யாணராமபுரம் 2-ம் வீதியில், அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அரிமளம் ஊராட்சி அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். பாஸ்கரனின் மனைவி கிருத்திகாதேவி (வயது 36). அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஹசன் முகமது (32). இவர், டிப்ளமோ கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இந்நிலையில் கிருத்திகா தேவி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது மாடிப்படியில் கிருத்திகாதேவியின் கழுத்தில் கத்தியால் குத்தி, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை ஹசன் முகமது பறிக்க முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா தேவி இறந்தார். இதனால் பயத்தில் ஹசன் முகமது அங்கிருந்த டியூப் லைட்டால் தனது கழுத்தில் கீறி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹசன் முகமதுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் ஹசன் முகமதுவுக்கு சங்கிலியை பறிக்க முயன்றதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து அதனை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் அரசு சட்ட உதவி மையம் மூலம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ஹசன் முகமதுவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story