ரெயில் மோதி வாலிபர் பலி


ரெயில் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:45 PM GMT)

நாகர்கோவிலில் ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தண்டவாளத்தில் பிணம்

நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள கண்டன்விளை ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிணமாக கிடந்தவர் தக்கலை மேல்பாறையை சேர்ந்த ரவிராஜ் (வயது 29) என்பது தெரிய வந்தது. கூலி தொழிலாளியான அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது.

ரெயில் மோதியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரவிராஜை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிைலயில்தான் அவர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், "தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயில் மோதி இறந்திருக்கலாம்" என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story