பற்கள் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி


பற்கள் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 11 Nov 2023 3:00 AM GMT (Updated: 11 Nov 2023 3:02 AM GMT)

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கற்களால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக ஏ.எஸ்.பி பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா 2 கட்டங்களாக விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதற்கிடையில் பல்வீர் சிங், ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வாணையத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துவங்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


Next Story