தேய்பிறை அஷ்டமியையொட்டிதட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுசாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்


தேய்பிறை அஷ்டமியையொட்டிதட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுசாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 10 July 2023 7:00 PM GMT (Updated: 10 July 2023 7:01 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேர்த்திகடனாக சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

சந்தனகாப்பு அலங்காரம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. இதையடுத்து சாமிக்கு உபகார பூஜை, சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

பிரசாதம்

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிப்பட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story