பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி100 அடி நீளத்தில் துரியோதனன் சிலை வடிவமைப்பு


பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி100 அடி நீளத்தில் துரியோதனன் சிலை வடிவமைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 7:00 PM GMT (Updated: 2 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி இரவு முதல் தொடங்கியது. மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள், கவுரவர்கள் போன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதைபாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை ஆடி 18 பண்டிகையையொட்டி துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்ததில் தடவிய பின்னரே கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து பின்னர் நீராடி வெற்றியை கொண்டாடும் வகையில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் சேலம், நாமக்கல் பகுதிகளிலும் ஆயுதங்களை சுத்தம் செய்வதற்கு ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு வந்து செல்வார்கள். மேலும் தலையில் தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story