ஆடி கிருத்திகை விழா: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி கிருத்திகை விழா:  முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆடி கிருத்திகை விழா: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கிருஷ்ணகிரி

ஆடி கிருத்திகை விழாவையொட்டி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணியர் கோவில்

ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும். நேற்று ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கிருஷ்ணகிரியில் காட்டிநாயனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகையை கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியவாறும் ஊர்வலமாக வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

சந்தூர் முருகன் கோவில்

சந்தூர் மாங்கனி மலையில் ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத கோவில் உள்ளது. இங்கு 53-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு தினமும் பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேல்முருகன் பூ பல்லாக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சிலம்பாட்டம், காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் முக்கிய நாளான நேற்று ஆடிக்கிருத்திகையை கிருத்திகையையொட்டி காலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து மாரியம்மன் கோயில் முன்பு வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்டம், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து காலை 11 மணியளவில் வேல் போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் போட்டு கொண்டும், காவடி எடுத்து சென்று சுவாமியை வழிப்பட்டனர்.

பிற்பகல் 2 மணியளவில், சந்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆந்தரத்தில் தொங்கியபடி, சிடல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், சந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சந்தூர் ஊர்பொதுமக்களும், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

நேர்த்திக்கடன்

இதே போல எட்ரப்பள்ளி வேல்முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோவில், அகரம் முருகன் கோவில், ஜெகதேவி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.


Next Story