வெண்ணந்தூர் அருகேமதுரை வீரன் சாமி கோவில் இடம் அளவீடும் பணி


வெண்ணந்தூர் அருகேமதுரை வீரன் சாமி கோவில் இடம் அளவீடும் பணி
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள மதுரை வீரன் சாமி கோவிலில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது எனக்கூறியும் அதனை அகற்ற பணி நடந்தது. இதனை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ராசிபுரம் துணை தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன், அத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் இடம் அளவீடு செய்யப்பட்டது. அதில் மதுரை வீரன் சாமி கோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அளவீட்டை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை. இதையடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இடம் அளவீடு பணியின்போது வெண்ணந்தூர் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.


Next Story