தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை-பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு


தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை-பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:47 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

தேய்பிறை அஷ்டமி

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே காலபைரவருக்கு 108 வகையான நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து 1,008 ஆகம பூஜைகளும், வேதபாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. இதையொட்டி காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சத்ரு சம்ஹார யாகம்

இரவு 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமி கோவில் வளாகத்தில் வீதி உலா சென்றார். இந்த சிறப்பு வழிபாட்டில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பூசணியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story