குருத்திகா கடத்தல் வழக்கு விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


குருத்திகா கடத்தல் வழக்கு விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2023 5:27 PM GMT (Updated: 26 Feb 2023 9:16 PM GMT)

குருத்திகா கடத்தல் வழக்கு விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை,

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வினித்-குருத்திகா. கடந்த சில ஆண்டுகளாக காலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டு கொட்டாகுளத்துக்கு வந்துவிட்டனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் அங்கு வந்து, குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். பின்னர் வினித்-குருத்திகா ஆகியோர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்தொடர்ந்து வந்த குருத்திகாவின் பெற்றோர் உள்ளிட்டோர் அவரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்ததாகவும், முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தென்காசி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story