கள்ளக்குறிச்சியில்பழைய இரும்பு கடையில் பயங்கர தீ;ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


கள்ளக்குறிச்சியில்பழைய இரும்பு கடையில் பயங்கர தீ;ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் பழைய இரும்புக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கள்ளக்குறிச்சி

தீ விபத்து

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் கடந்த 7 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் முத்துக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் பழைய இரும்பு கடை மர்மமான முறையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பின்னர் தீ மளமளவென கடை முழுவதும் பரவி, அனைத்து பொருட்களும் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், கள்ளக்குறிச்சி போலீசாருக்கும், முத்துக்குமாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரமணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தொழில் போட்டி காரணமாக கடைக்கு தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story