மதுரை அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 5 பேர் வெறிச்செயல்


மதுரை அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 5 பேர் வெறிச்செயல்
x

மதுரை அருகே 5 பேர் கும்பலால், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை


ஆட்டோ டிரைவர்

மதுரையை அடுத்த சிலைமான் சங்கையா கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் சங்குகண்ணன் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு சங்கு கண்ணன் வீட்டுக்கு வந்தார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து அவரிடம் தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்கியது. இதில் சங்கு கண்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலைமான் போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில், "கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கு கண்ணன், கீழடி பகுதிக்கு கஞ்சா வாங்குவதற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே அதன் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக கீழடி மற்றும் மதுரை அண்ணாநகர், சின்ன உடைப்பு பகுதிகளை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர். இந்த படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story