கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

கரூர்

திருவிழா

கரூர் தாந்தோணிமலை மலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

தெப்பத்திருவிழா

இந்தநிலையில் இந்தாண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை உற்சவ பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து சுவாமி பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

8-ந்தேதி தெப்பத்திருவிழா

மார்ச் மாதம் 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 6-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 8-ந்தேதி தெப்பத்தேர் சுற்றி வருதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

15-ந்தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா முடிவடைகிறது. இந்த விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story