அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவு


அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவு
x
தினத்தந்தி 18 July 2023 4:51 PM GMT (Updated: 18 July 2023 5:08 PM GMT)

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது.

சென்னை,

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கவுதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை விடிய, விடிய விசாரணை நடத்திய பின், அதிகாலை 3 மணி அளவில் அமைச்சர் பொன்முடி திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகினர். இருவரிடமும் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுமார் 6 மணி நேரமாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை நடத்திய 2-வது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறையினரின் விசாரணை முடிந்ததை அடுத்து அமைச்சர் பொன்முடி அவரது வீட்டிற்கு திரும்பினார். மீண்டும் ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story