பா.ஜனதா பிரமுகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


பா.ஜனதா பிரமுகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x

பெரம்பலூரில் சினிமா இயக்குனர் கொலை வழக்கில் கைதான பா.ஜனதா பிரமுகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

சினிமா டைரக்டர் கொலை

பெரம்பலூர் புறநகர் அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல்ரகுமான் (வயது 39). சினிமா டைரக்டரான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி இவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பாருக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொன்றது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் திருநகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஜெயபாலாஜி (43) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில், பா.ஜனதா பிரமுகரான ஜெயபாலாஜியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் கற்பகம், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயபாலாஜியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் செல்வராணி ஆகியோர் நேற்று திருச்சி மத்திய சிறைக்கு சென்று ஜெயபாலாஜியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கான உத்தரவினை அவரிடம் வழங்கினர்.


Next Story