குடும்ப தகராறில் அண்ணனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தம்பி


குடும்ப தகராறில் அண்ணனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தம்பி
x

உயிரிழந்த குமார்,கைதான வீராசாமி

குடும்ப தகராறில் அண்ணனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவரது தம்பி சின்னப்பிள்ளை என்கிற வீராசாமி(41). அண்ணன், தம்பியான இவர்கள் இருவருக்குமிடையே குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சிறுசிறு தகராறுகள் நடந்து வந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று குமாரும், வீராசாமியும் சித்தர்க்காடு சம்பந்தங்குளம் கலைஞர் நகரில் உள்ள தங்கள் தங்கை மாரியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு குமார், வீராசாமி மற்றும் மாரியம்மாளின் கணவர் வினோத்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது முன்விரோதம் காரணமாக வீராசாமிக்கும், குமாரருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் வீராசாமி அங்கிருந்த கடப்பாரையால் அண்ணன் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து வீராசாமியை கைது செய்தனர்.


Next Story