போலீசார் வந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்


போலீசார் வந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம் அடைந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வல பாதுகாப்பு பணிக்காக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன், போலீஸ் ஏட்டு காதர்கான், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகிய 3 பேரும் நேற்று காலை நண்பர் ஒருவரின் காரில் புறப்பட்டு முத்துப்பேட்டைக்கு மதியம் வந்தனர். முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் மங்கலூர் அருகே கொய்யாதோப்புக்கு செல்லும் வழியில் காரை நிழலில் நிறுத்தி விட்டு அதிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.அப்போது திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக காரில் இருந்து இறங்கி உள்ளனர். இதை தொடர்ந்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story