சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது


சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 2 Oct 2023 8:15 PM GMT (Updated: 2 Oct 2023 8:15 PM GMT)

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. எனவே, கடைகளை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. எனவே, கடைகளை சீரமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

916 கடைகள்

குன்னூர் நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் 916 கடைகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. இதற்கிடையே வணிக வளாக கட்டிடத்தில் சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.

மேலும் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி கடைகளுக்கான வாடகை மற்றும் வரியை குறைப்பதாக சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நகராட்சி கடைகளுக்கு 3 மடங்கு வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது. வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இருப்பினும், பழுதடைந்த கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- நகராட்சி மார்க்கெட்டில் விரிசல் ஏற்பட்ட கட்டிடங்கள் மற்றும் கடைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஆனால், சிலருக்கு கடைகளை அவர்களே சீரமைக்க நகராட்சி அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக வி.பி. தெரு நுழைவுவாயில் அருகே பழமையான கடைகளை உயர்த்தி கட்டும் பணி நடக்கிறது. இதேபோல் மார்க்கெட்டில் 5 கடைகளில் ஷட்டர் மாற்றும் பணிக்கு யார் அனுமதி வழங்கியது என கேள்வி எழுந்து உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள கடைகளை புதுப்பிக்க அனுமதி தராமல், முறைகேடாக கட்டும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளையும் சீரமைக்க அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story