சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்


சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தேசியக்கொடி ஏற்றினார்
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டில் தேசியக்கொடியை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஏற்றினார்.

சென்னை,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை ஐகோர்ட்டில் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சில் மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தபால் தலை

சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஐகோர்ட்டு கட்டிடம் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த தபால் தலையை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வெளியிட மூத்த நீதிபதி எம்.துரைசாமி பெற்றுக்கொண்டார். பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய ஐகோர்ட்டு வாகன டிரைவர்களுக்கு பதக்கத்தை தலைமை நீதிபதி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, என்.சேஷசாயி, எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.வி.கார்த்திகேயன், ஜி.ஜெயச்சந்திரன், எம்.தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி உள்ளிட்டோர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்துகொண்டனர்.

நீதிபதி ஆர்.சுப்பையா

அதேபோல அல்லிக்குளம் கோர்ட்டு வளாகத்தில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதிகள் காரல்மார்க்ஸ், வேல்ராஜ், சச்சிதானந்தம், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர்.சுப்பையா தேசியக்கொடியை ஏற்றினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசியக்கொடியை ஏற்றினார்.


Next Story