விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்த கலெக்டர்


விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்த கலெக்டர்
x
தினத்தந்தி 29 Jun 2023 5:10 PM GMT (Updated: 30 Jun 2023 11:21 AM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வேலூர் மாவட்ட வீரர்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழியனுப்பி வைத்து, மாணவர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார்.

வேலூர்

விளையாட்டு போட்டி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளிகள், கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 23 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 3 ஆயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

வழியனுப்பு விழா

இதில் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து 778 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது. போட்டியின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களில் முதற்கட்டமாக 68 வீரர்கள், வீராங்கனைகளுக்கான வழியனுப்பு விழா நேற்று மாலை நடந்தது.

பஸ்சில் பயணம் செய்த கலெக்டர்

காட்பாடி தீயணைப்பு நிலையம் முன்பு இருந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பஸ்சில் மாணவர்களுடன் காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரி வரை பயணம் செய்தார்.

அப்போது அவர் விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story