பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

நடு கூடலூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
நடு கூடலூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பழுதடைந்த சாலை
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்கூடலூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கூடலூர் ராஜகோபாலபுரம் வழியாக நடு கூடலூருக்கு இணைப்பு சாலை செல்கிறது. இதே சாலை வழியாக ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும். இதனால் சீசன் மற்றும் விபத்து ஏற்படும் நேரங்களில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க நடு கூடலூர் வழியாக வாகனங்களை இயக்க போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர். இது தவிர ஏராளமான மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த வழியாக சென்று வருகின்றனர். பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடு கூடலூர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
ஆனால், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனிடையே பழுதடைந்த சாலையில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சில சமயங்களில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலையை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.