'தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது'


தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது
x

சினிமா தியேட்டர்கள் ஏழை, எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்கு போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள். இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா? என்று கேட்டால், முடியாது என்றே சொல்ல தோன்றுகிறது.

அரியலூர்

மயக்கம் தரும் விலை

அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமன்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளை கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.

10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச்சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) ரூ.60 முதல் ரூ.160 வரை! காபி, டீயா? 30 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கான் ரூ.400 வரை விற்கிறார்கள். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.

இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்கு போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.

என்ன நியாயம்?

இதுபற்றி விசாரித்தால், ''தியேட்டர் பராமரிப்பு செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.

நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களை பிடுங்கிவைத்துக் கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை.

சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-

மும்மடங்கு விலை உயர்வு

அரியலூரை சேர்ந்த இந்துமதி:- சினிமா தியேட்டர்களில் தின்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வெளியில் சோதனை செய்து தடுத்து நிறுத்தி விடுகின்றனர். வெளியில் விற்கப்படும் விலைகளை விட தியேட்டர் கேண்டீன்களில் மும்மடங்கு விலை உயர்வாக காணப்படுகிறது. விலை உயர்வை பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது. தண்ணீர் பாட்டில் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. டிக்கெட் விலையை விட தின்பண்டங்கள் விலை அதிகமாக இருப்பதால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது.

அதிரடி சோதனை

அரியலூரை சேர்ந்த அருள்ராஜா:- தற்போதைய காலகட்டத்தில் குடும்பபாங்கான மற்றும் நகைச்சுவையான திரைப்படங்களை மட்டுமே பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று கண்டு களித்து வருகிறார்கள். திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் விலையும் உயர்வு, ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் துறையினர் திரையரங்குகளில் அதிரடி சோதனை நடத்தி அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றின் விலையை குறைக்க வற்புறுத்தினர். ஆனால் தற்போது எந்த திரையரங்கமும் இந்த உத்தரவை மதித்து பின்பற்றுவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை நடத்தி உணவு பொருட்களை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்ப்பந்தம் செய்வது இல்லை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர்:- திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கானை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர். திரையரங்குகளில் பாப்கார்ன் மட்டும் அப்படி விற்பதில்லை, ரெயில் டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு கட்டணம், சாதாரணமாக ஆன்-லைனில் வாங்கினால் ஒரு கட்டணம், தட்கல் மற்றும் பிரிமியம் தட்கல் என்ற வகையில் கட்டணங்கள் மாறுபடுகிறது. செலவினங்களுக்கு ஏற்ப வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேட்டா கார்னர்

டீ- ரூ.30

காபி- ரூ.30

சமோசா- ரூ.30

பப்ஸ்- ரூ.40 முதல் 50 வரை

பாப்கார்ன்- ரூ.60 முதல் ரூ.160 வரை

குளிர்பானங்கள்- ரூ.50 முதல் ரூ.80 வரை

குடிநீர் பாட்டில்- ரூ.20

வாகன கட்டணம்

மோட்டார் சைக்கிள்- ரூ.10

கார்- ரூ.50


Next Story