ஆட்டோவில் அமர்ந்தபடி டிரைவர் தீக்குளித்து தற்கொலை


ஆட்டோவில் அமர்ந்தபடி டிரைவர் தீக்குளித்து தற்கொலை
x

புளியங்குடி அருகே ஆட்டோவில் அமர்ந்தபடி தீக்குளித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 50). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். தற்போது வாசுதேவநல்லூரில் தங்கியிருந்து வந்தார்.

இவருக்கு பார்வதி, உமா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பார்வதி, தலைவன்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது. 2-வது மனைவி உமா, திருப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

வெள்ளத்துரை குடும்ப பிரச்சிைன காரணமாக 2 மனைவிகளையும் பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் உறவினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தும், அவரை யாரும் கவனிப்பது இல்லை என்ற மனவருத்தத்திலும் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வெள்ளத்துரை தனது சொந்த ஊரான மலையடிக்குறிச்சிக்கு சென்றார். அங்குள்ள குளத்தில் ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்தவாறு மது அருந்திய அவர் திடீரென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் ஆட்டோவுடன் தீப்பிடித்து எரிந்த அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலையில் அந்த வழியாக விவசாய வேலைக்கு சென்றவர்கள், தீயில் எரிந்த நிலையில் ஆட்டோவும், அதில் வெள்ளத்துரை உடல் கருகி இறந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த வெள்ளத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story