காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை


காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் சிவப்பாக பிறந்ததால் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மயிலாடுதுறை


குழந்தைகள் சிவப்பாக பிறந்ததால் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

காதல் திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அசிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 32) டிரைவர். இவர் அதே தெருவை சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சிவப்பாக பிறந்தது. இதனால் மனைவியின் நடத்தையில் அய்யப்பன் சந்தேகம் அடைந்தார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தையும் சிவப்பாக பிறந்தது. இதனால் அய்யப்பனின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் அய்யப்பன் தினமும் குடித்துவிட்டு அகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சிகரெட் நெருப்பால் மனைவியின் உடலில் சுட்டும் சித்திரவதை செய்துள்ளார்.

இதனால் அகிலா கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதையடுத்து அகிலாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி காலை அகிலாவின் கழுத்தை அய்யப்பன் கயிற்றால் இறுக்கி நெரித்துள்ளார். அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அதையடுத்து அய்யப்பன் அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் வீட்டில் மயங்கி கிடந்த அகிலாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அகிலா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அகிலாவின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார், அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கந்தகுமார், மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற குற்றத்துக்காக அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், மேலும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இதனைத்தொடர்ந்து குத்தாலம் போலீசார், அய்யப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் வாதாடினார்.

மயிலாடுதுறையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கில்தான் முதல் முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story