விவசாயி தலையை துண்டித்து மொபட்டில் எடுத்துச்சென்ற கொடூரம்-இளநீர் வியாபாரி கைது


விவசாயி தலையை துண்டித்து மொபட்டில் எடுத்துச்சென்ற கொடூரம்-இளநீர் வியாபாரி கைது
x
தினத்தந்தி 21 Sep 2023 7:00 PM GMT (Updated: 21 Sep 2023 7:00 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையை வெட்டி மொபட்டில் எடுத்து சென்ற இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையை வெட்டி மொபட்டில் எடுத்து சென்ற இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

விவசாயி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடிகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.

நேற்று காலை சுமார் 11 மணி அளவில் வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

தலை துண்டித்து கொலை

அப்போது, அங்கு மொபட்டில் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எனினும் ஆத்திரம் தீராத அந்த நபர், வேல்முருகனின் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்தார். பின்னர் சாக்குமூட்டையில் அந்த தலையை போட்டு கட்டி தனது மொபட்டில் எடுத்துச்சென்றார்.

போலீசார் விரைந்தனர்

வெறும் உடல் மட்டும் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலையை போலீசார் தேடி வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கயத்தாறு பகுதியில் தலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன் வேல்முருகனின் தலை மட்டும் கிடந்தது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இதுதொடர்பாக ஊத்துமலை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் தலையை மீட்டனர்.

கள்ளக்காதல்

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் வேல்சாமி (37). இவர் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள்.

இவருக்கும், வேல்முருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த வேல்சாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.

மீண்டும் தகராறு

பின்னர் வேல்சாமி தனது மனைவியுடன் கயத்தாறு பாரதி நகரில் குடியேறினார். அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் இசக்கியம்மாள் கோபித்து கொண்டு தனது தாய் வீடான கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியான வேல்சாமி தனது மனைவி பிரிந்து சென்றதற்கு வேல்முருகன் தான் காரணம் என்று ஆத்திரத்தில் இருந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று காலையில் மொபட்டில் கண்ணாடிகுளத்திற்கு வேல்சாமி சென்றார். அங்கு தோட்டத்தில் இருந்த வேல்முருகனை வெட்டிக் கொன்று தலையை துண்டித்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இசக்கியம்மாள் வீட்டின் முன்பு போட்டுச் சென்றுள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்சாமியை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வேல்முருகனுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார்.

ஊத்துமலை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story