செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று விவசாயி தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று விவசாயி தற்கொலை மிரட்டல்
x

தரகம்பட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

கரூர்

தற்கொலை மிரட்டல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (43). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் தோட்ட நிலங்கள் அருகருகே உள்ளது. இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டின் அருகே சேகரித்து வைத்திருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். இந்த தீ லோகநாதன் வீட்டில் உள்ள வாழைமரம் மற்றும் மற்ற மரங்களில் பட்டு தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தார்.இதனால் விசாரணைக்காக ரமேசை போலீசார் அழைத்துள்ளனர். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்த ரமேஷ் செம்பியநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள 200 அடி உயரம் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.

தீயணைப்பு துறையினர் மீட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டாட்சியர் ராஜாமணி, பாலவிடுதி இன்ஸ்பெக்டர் யசோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறி ரமேசை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் நேற்று காலை 7.30 மணி மதியம் 12.30 வரை அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story