விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பட்ஜெட்

மத்திய அரசின் பட்ஜெட், கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளா்களின் விரோதமாக உள்ளது. விலைவாசி உயா்வுக்கு தீா்வு காணாத பட்ஜெட்டாகவும் அமைந்து உள்ளது. எனவே இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் 11-ந் தேதி கருப்பு நாளாக கடைப்பிடித்து, ஒன்றிய, வட்ட தலைநகரங்களிலும், பிரதான கிராமங்கள் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் கூட்டாக அறிவித்து இருந்தது.

ஆர்ப்பாட்டம்

அதன்படி தூத்துக்குடியில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஒன்றிய செயலாளர் சங்கரன், விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட தலைவர் முத்து, வைனபெருமாள், முருகன், ஜாய்சன், மனோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

கோவில்பட்டி

இதேபோல் கோவில்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மத்திய பட்ஜெட்டின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணியர் விடுதி முன்பு நடந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் எட்டயபுரம் தாலுகா தலைவர் கருப்பசாமி, தாலுகா செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், தாலுகா குழு உறுப்பினர் கணேசன், விவசாய சங்க கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் தலைமையிலான போலீசார், 14 பேரை கைது செய்தனர்.




Next Story