பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை


பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை
x

மனைவி தாய்ப்பால் கொடுக்க தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம் தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவருடைய மனைவி அஞ்சலி (23). இவர்களுக்கு ரூத் (6), சமீரா (4) என்ற 2 மகள்களும், எஸ்யூ (2) என்ற ஒரு மகனும், கங்கோத்ரி என்ற 2 மாத பெண் குழந்தையும் உண்டு.

இந்த குடும்பத்தினர் கடந்த 10 நாட்களாக திருவள்ளூர் பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலம் கீழ் தங்கி இருந்து பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பொறுக்கி இரும்பு கடையில் விற்பனை செய்யும் வேலை செய்து வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் 2 மாத கைக்குழந்தை பசியில் அழுதுள்ளது. அப்போது போதையில் இருந்த சுரேஷ், தனது மனைவியிடம் குழந்தை அழுகிறது எழுந்து பால் கொடு என்று கூறியுள்ளார்.

ஆனால் அஞ்சலி எழுந்து பால் கொடுக்க தாமதித்ததாக தெரிகிறது. மேலும் குழந்தையும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் போதையில் இருந்ததால் 2 மாத பச்சிளம் பெண் குழந்தையை காலை பிடித்து தூக்கி ஓங்கி தரையில் அடித்தார்.

இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் குழந்தையை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து பார்த்து டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த குழந்தையின் தந்தை சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவரை, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story